ஒரு மனிதன் வழக்கமாக ஊர் முழுவதும் சுற்றி பொம்மைகள் விற்பான். அவன் ஒரு நாள், ஒரு ராஜ்ஜியத்திற்கு வந்தான். அந்த நாட்டு மன்னருக்கு புதிய, தனித்துவமான பொம்மைகள் மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்து கொண்டான்.
எனவே அந்த மனிதன் அரசரின் அரண்மனைக்கு வந்தான். அப்போதுதான் அரச சபை கூடி இருந்தது. அவன் அரசர் முன் வந்து, “மதிப்பிற்குரிய அரசரே, இன்று உங்களுக்கு சில பொம்மைகளை நான் காண்பிக்கப் போகிறேன். இதை இதற்கு முன்பு நீங்கள் எப்போதுமே பார்த்திருக்க முடியாது” என்றான்.
பொம்மைகளை சபை முன் காட்டுவதற்கு அரசர் அனுமதித்தார்.
அந்த பொம்மை வியாபாரி தனது பெட்டியில் இருந்து மூன்று பொம்மைகளை வெளியே எடுத்தார். அவை மனித உருவத்திலேயே இருந்தன. அரசர் முன்னே அந்த பொம்மைகளை வியாபாரி வைத்தான். அரசரிடம்,“இந்த பொம்மைகள் தங்களுக்குள் மிகவும் சிறப்புத் தன்மை வாய்ந்தவை. பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், அவைகள் உண்மையிலேயே முழுவதும் வித்தியாசமானவை” என்றான்.
அவன் அந்த பொம்மைகளை ஒவ்வொன்றாக, சுட்டிக் காட்டி, ”இந்த முதல் பொம்மையின் மதிப்பு 1000 பொற்காசுகள்; இரண்டாவது பொம்மையின் மதிப்பு 100 பொற்காசுகள்; மூன்றாவது பொம்மையின் மதிப்பு ஒரே ஒரு பொற்காசு “ என்றான்.
அரசர் அந்த மூன்று பொம்மைகளையும் மிக கவனமாக பார்த்தார்; ஆனால் அவற்றுள் எந்த விதமான வேறுபாட்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பொம்மைகளின் விலையில் ஏன் இவ்வளவு தூரம் வித்தியாசம் இருக்கிறது என்று அரசர் ஆச்சரியப்பட்டார்.
அவரால் எதையும் கண்டு பிடிக்க முடியாததால், அரசர் தன் அமைச்சர்களிடம் வித்தியாசத்தைக் கண்டு பிடியுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அமைச்சர்களும் எல்லா பக்கங்களிலும் இருந்து பொம்மைகளைப் பார்த்தும், அவர்களால் இந்த புதிருக்கான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன் பிறகு அரசர் தன் ராஜ குருவை அழைத்து, நீங்கள் வந்து இந்த பொம்மைகளைப் பாருங்கள் என கேட்டுக் கொண்டார். அந்த ராஜ குரு மிகக் கவனத்தோடு பொம்மைகளைப் பார்த்தார். மூன்று வைக்கோல் குச்சிகளைக் கொண்டு வர உத்தரவிட்டார்.
வைக்கோல்கள் குச்சிகள் வந்தவுடன் குரு ஒரு வைக்கோல் குச்சியை முதல் பொம்மையின் காதுக்குள், செலுத்தினார். அந்த வைக்கோல் நேராக அந்த பொம்மையின் வயிற்றுக்குள் சென்றதை அனைவராலும் பார்க்க முடிந்தது; சிறிது நேரத்தில் அந்த பொம்மையின் உதடுகள் அசைந்து பிறகு மூடி விட்டன.
பிறகு ராஜ குரு இரண்டாவது வைக்கோல் குச்சியை எடுத்து அடுத்த பொம்மையின் காதுக்குள் விட்டார். இந்த முறை, அந்த வைக்கோல் அடுத்த காது வழியாக வெளி வந்ததை அனைவரும் பார்த்தனர். வேறு எந்த விதமான அசைவும் இல்லை.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய, மிகவும் ஆவலோடு இருந்தார்கள்.
இப்போது குரு மூன்றாவது பொம்மையின் காதினுள் வைக்கோல் குச்சியை செலுத்தினார். அந்த பொம்மையின் வாய் உடனே திறந்தது. மூடாமல் நிலையாகவே அசைந்து கொண்டு இருந்தது. அது ஏதோ சொல்வதற்கு விரும்புவது போல வாய் அசைந்து கொண்டே இருந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசர் குருவிடம்,
“ இவை எல்லாம் என்ன? இந்த பொம்மைகளின் விலையில் அதிக அளவில் வித்தியாசம் இருப்பது ஏன்? “ என்றார்.
அதற்கு குரு,“ நல்ல குண நலன் உள்ள மனிதன் தான் கேள்விப் பட்டதை எப்போதும் தனக்குள் வைத்துக் கொள்வான். அந்த விஷயம் சரியா தவறா என்பதை உறுதிப்படுத்தியப் பிறகே, தன் வாயைத் திறப்பான். அதுதான் அவனது சிறந்த தன்மை. இந்த விவேகத்தைதான் நாம் முதல் பொம்மையிடம் இருந்து பெற்றுக் கொள்கிறோம். இதனால்தான் அந்த பொம்மையின் மதிப்பு 1000 பொற்காசுகள்.“
சில மனிதர்கள் தங்களைப் பற்றியே நினைத்து எப்போதும் தங்களுக்குள் மூழ்கி விடுவார்கள். மற்றவை எதையையும் கண்டு கொள்ளாமல், அலட்சியம் செய்து விடுவார்கள். எதைப் பற்றியும் அவர்கள் அக்கறை கொள்ள மாட்டார்கள். தங்களை மற்றவர்கள் புகழவேண்டும் என எதிர்பார்க்கவும் மாட்டார்கள். இப்படிப் பட்ட மக்கள் ஒரு போதும் அடுத்தவருக்கு துன்பம் கொடுக்க மாட்டார்கள். இதைத்தான் நாம் இரண்டாவது பொம்மையிடம் இருந்து கற்றுக் கொள்கிறோம். இதனால்தான் அந்த பொம்மையின் மதிப்பு 100 பொற்காசுகள்.
சில மனிதர்கள் வலுவிழந்த காதுகளும், ஓட்டை வாயாகவும் இருப்பார்கள். எதையாவது கேட்ட பிறகு, அதைப் பற்றி, சுற்றி உள்ளவர்களிடம் உடனே கூறிவிடுவார்கள். தான் கேட்டவை சரியா, தவறா என்று சிறிது கூட முயற்சி செய்து பார்க்காமல், அவர்கள் தவறானதை சமுதாயத்தில் பரவச் செய்து விடுவார்கள். அதாவது, வதந்திகளைப் பரப்பி விடுவார்கள். எனவேதான் இந்த பொம்மையின் மதிப்பு ஒரே ஒரு பொற்காசு.
கதை கட்ட ஒருவன்
பிறந்து விட்டால்,
கண்ணகி வாழ்விலும்
களங்கம் உண்டு.
காப்பாற்ற சிலபேர்
இருந்து விட்டால்,
கள்வர்கள் வாழ்விலும்
நியாயம் உண்டு.
என்ற கவியரசின் பாடல் வரிகள் இந்த பொம்மைகளின் புதிருக்கு நிரூபணம் ஆகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக